விடுதலைப் புலிகள் பத்திரிகை

தை 1991

காலங்காலமாக, தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த – வெறுக்கத்தக்க – ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகின்றது. எமது 18 வருட கால ஆயுதப் போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர, சாதியத்தின் முனையும் மழுங்கி வருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளைச் சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகின்றது.

சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கின்றது.

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிநபருக்குச் சொந்தமானது. அந்த மனிதர் தன்னை ஒரு ‘உயர்சாதிக்காரர்’ என எண்ணிக் கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்குக் குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றைத் தீண்டக்கூடாது என்கிறார்.

இதேபோன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும், காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப் புலிகள் அந்த ‘உயர்சாதிக்காரர்’ என்பவரை அழைத்து நியாயம் கேட்கின்றார்கள். சமூகநீதி – சமத்துவம் பற்றி விளக்குகின்றார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் – மனித நாகரீகத்தைப் பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர் இலகுவில் மசிவதாக இல்லை.

தனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகின்றார். உழுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகின்றார்.

இவை உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இன்றும் சந்திக்கின்றார்கள்.

சாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிப்பேய் கோரத்தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டு வந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம் கொண்டார்கள்.

‘அடங்காத் தமிழர்’ ஒரு புறமும், அடக்கப்பட்ட தமிழர்கள் ஒரு புறமுமாகக் களத்தில் இறங்கினார்கள்.

தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்குக் கோவில்கள் திறந்துவிடப்பட வேண்டும். தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள்.

இதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புக்களும் நடைபெற்றன.

இது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது.

ஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ, தேனீர்க் கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒளிந்துவிடப் போவதில்லை.

அதே சமயம் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானது மட்டுமல்ல, சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய ‘புத்திசாதுரியத்துடன்’ மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயலுமாகும்.

இவர்கள் நடாத்திய ‘சமபந்திப் போசனம்’ என்ற நாடகம் தங்களை ‘உயர்சாதிக்காரர்’ எனத் தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல.

‘சாதியம்’ என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக் கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சினை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ணகுல அமைப்பிலிருந்து சாதிப் பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்துச் சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி, விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாகச் சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதால் பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும், சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

கிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக் கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப் பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஒரு தொழில் உன்னதமானது. மற்றைய தொழில் உன்னதம் குறைந்தது, அல்லது இழுக்கானது என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தத் தொழிற் பிரிவுகளிலிருந்தும், அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்துக்களிலிருந்தும் ‘உயர்சாதி’, ‘தாழ்ந்த சாதி’ என்ற மூடத்தனமான சமூக உறவுகளும், அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன.

செய்யும் தொழில் எல்லாம் உயர்ந்தது. உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தைத் தாழ்த்தப்பட்டோர் என்றும், தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத்தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது.

நீண்ட காலமாக எமது சமுதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும், சம்பிரதாயங்களையும் தொகுத்து, அந்நிய காலனித்துவ ஆட்சியாளர் அதனைச் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச் சட்டம் எனப்படும். இச் சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும், சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு, ‘உயர்சாதிக்காரர்’ எனக் கருதப்படும் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத் தொகுப்பு அமைந்திருக்கின்றது.

பிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள், மூடநம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கிச் சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த ‘உயர் சாதியினர்’ எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய, பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடத் துணியவில்லை.

பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி, அப்பாவிகளான பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்றுப் பதவிக் கட்டில் ஏறினார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும், தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப் புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும், அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும், எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக் கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லாச் சமூகப் பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாகப் புலிகள் கண்ட வளர்ச்சியும், அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும், சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தன. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி, சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகின்றது.

புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதிவேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றன. இது சமூக உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட அது வெட்கக் கேடானது, அநாகரீகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாகக் காலம் காலமாக இருந்து வந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும்.

இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிட முடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சாதியப் பிரச்சினைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கின்றோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து, மக்களின் ஆழ்மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பில் குணமாக்கிவிடுவதென்பது இலகுவான காரியமல்ல. அப்படி நாம் அவசரப்பட்டுச் சட்டங்கள் மூலமாகவோ, நிர்ப்பந்தங்கள் வாயிலாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறிகாட்டி, அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது; அனுமதிக்க முடியாதது.

மற்றையது சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகரப் புறநிலைகளும் சாதிய அமைப்பைத் தகர்க்கத் தொடங்கியிருக்கிறன. எனினும் பொருளாதார உறவுகளிலும், சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப் போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்குச் சமுதாயப் புரட்சியுடன், மனப்புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப் பெற்று, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்த முடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளைப் படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப் போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.

எமது இளம் பரம்பரையினருக்குப் புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான, பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையைப் புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கிப் புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக் கொண்டால் சாதியம் என்ற மனநோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.